செலாயாங், செப் 24- கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட தாமான் டெம்பளர் தொகுதி மக்களுக்கு உதவுவதற்காக இதுவரை 200,000 வெள்ளிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.
உணவுக் கூடைகள், மருத்துவம், அத்தியாவசிய உணவுப் பொருள் உதவி, மடிக்கணினி, கையடக்க கணினி போன்ற கல்வி உபகரணங்கள் ஆகியவை தேவைப்படும் தரப்பினருக்கு வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சானி ஹம்சான் கூறினார்.
உதவித் திட்டங்களுக்காக மட்டும் இதுவரை இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளோம். தொகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய இந்த உதவித் திட்டம் தொடச்சியாக மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள டாத்தாரன் இல்முவில் நடைபெற்ற தாமான் டெம்ப்ளர் தொகுதி நிலையிலான செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் உணவுக் கூடைத் திட்டத்திற்கு கூடுதலாக ஐம்பதாயிரம் வெள்ளி மானியம் அனைத்து தொகுதிகளுக்கும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி கூறியிருந்தார்.
இது தவிர, சிரமத்தில் உள்ள மக்களுக்கு உதவும் திட்டங்களை மேற்கொள்வதற்காக பக்கத்தான் ஹராப்பான் வசமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தலா 30,000 வெள்ளி மானியமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.