ஷா ஆலம், அக் 9- அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மாறுபட்ட முறையில் நடைபெறும் என்றும் அவை தனித்தனியாகவும் வேறு வித வடிவிலும் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்களை பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தினோம். அவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததோடு மாநில அரசின் நிலை அல்லது ஒதுக்கீட்டின் உண்மை நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினையும் பெற்றனர் என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடல் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். மாநில அரசின் தலைமைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தாம் விரைவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு தாக்கல் செய்து என்பது குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது என்றார் அவர்.