புத்ரா ஜெயா, அக் 14- கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஆறு மாதங்களைக் கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இந்த ஊக்கத் தடுப்பூசியைப் பெறத் தகுதியுள்ளவர்களுக்கு மைசெஜாத்ரா செயலி வாயிலாக தெரிவிக்கப்படும். மைசெஜாத்ரா செயலி இல்லாதவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அல்லது தடுப்பூசி மையத்திலிருந்து தொலைபேசி அழைப்பின் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றப் பின்னரும் காலப்போக்கில் அதன் வீரியம் குறைந்து போதுமான அளவு நோய்த் தடுப்பாற்றலை கொண்டிராத தரப்பினருக்கு கூடுதலாக இந்த ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த ஊக்கத் தடுப்பூசி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இலவசமாகவும் சுய விருப்பத்தின் பேரிலும் வழங்கப்படுவதாக கைரி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு கூடுதல் பட்ச காலத்திற்கு நோய்த் தடுப்பாற்றலை வழங்கும் நோக்கில் இந்த ஊக்கத் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் இந்த ஊக்கத் தடுப்பூசியை வழங்கும் பணியை தனியார் கிளினிக்குகள் மேற்கொள்ளும் என்றும் அவர் விளக்கினார்.
இது தவிர, சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளிலும் மலேசிய ஆயுதப்படை சுகாதார மையங்களில் ஆயுதப்படை வீரர்களுக்கும் இந்த ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார் அவர்.