கோலாலம்பூர், அக் 15- பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வரும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு போலீஸ் புகார்களைச் செய்துள்ளது.
இந்த புகாரின் வழி சம்பந்தப்பட்டத் தரப்பினரை விசாரிப்பது மற்றும் குற்றஞ்சாட்டுவது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில் கூறினார்.
இந்த தரப்பினர் தொடர்ந்து பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருவதோடு பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்று அந்த பதிவில் கூறிய அவர், டாக்டர் சக்கினா சூலோங் என்ற மருத்துவரின் டிவிட்டர் பதிவையும் இணைத்திருந்தார்.
மலேசியாவில் உள்ள தடுப்பூசி எதிர்ப்பு தரப்பினர் யாராலும் அசைக்க முடியாதவர்கள் என்று நான் ஒருவர்தான் கருகிறேனோ? என்று தனது பதிவில் டாக்டர் சக்கினா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று வரை 5,410 பேருக்கு குறிப்பாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மற்றொரு டிவிட்டர் பதவில் கைரி குறிப்பிட்டுள்ளார்.
மூத்த குடிமக்கள் வெகு விரைவில் தனியார் கிளினிக்குகளில் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவர் என்றும் அவர் சொன்னார்.