கோலாலம்பூர், அக் 16- கோலாலம்பூர், புத்ரா ஜெயா, சிலாங்கூர், மலாக்கா ஆகிய பகுதிகள் வரும் திங்கள் கிழமை தொடங்கி தேசிய மீட்சித் திட்டத்தின் (பி.பி.என்.) நான்காம் கட்டத்திற்கு மாறுகின்றன.
அதே தினத்தில், கிளந்தான், பேராக், பினாங்கு, சபா, கெடா ஆகிய மாநிலங்கள் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்கு மாற்றம் காண்கின்றன.
தனது தலைமையில் நேற்று நடைபெற்ற கோவிட்-19 பெருந்தொற்று சிறப்பு நடவடிக்கை குழு கூட்டத்தில் இதன் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இதன் வழி நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மாறிவிட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பி.பி.என். நிர்ணயித்துள்ள வழிகாட்டி மற்றும் தடுப்பூசி பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நான்காம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்திற்கு மாறும் மாநிலங்களில் அமல்படுத்தப்படும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை www.mkn.gov.my. எனும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அகப்பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றார் அவர்.