கோம்பாக், அக் 18- கிழக்குக் கரை இரயில் திட்டத்தை (இ.சி.ஆர்.எல்.) உலு லங்காட், சிப்பாங் மற்றும் மேற்கு துறைமுகத்தை உட்படுத்திய வழித்தடத்தில் மேற்கொள்வதற்கு மட்டுமே அனுமதி வழங்குவது என்ற நிலைப்பாட்டில் சிலாங்கூர் அரசு உறுதியாக உள்ளது.
இந்த திட்டத்தை வடக்கு வழித்தடத்தில் மேற்கொள்வதற்கு மத்திய அரசு எண்ணம் கொண்டிருந்த போதிலும் மாநில அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது தெற்கு வழித்தடத்திற்கு மட்டுமே அனுமதி அளிப்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்து விட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்திற்கான வழித்தடத்தை இறுதி செய்வது தொடர்பில் மத்திய அரசு மறுபடியும் எங்களை நாடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இ.சி.ஆர்.எல். திட்டம் மேம்படுத்தப்பட்டு கடந்த 2016 மற்றும் 2017இல் பரிந்துரைக்கப்பட்டது போல் வடக்கு வழித்தடத்தில் நிர்மாணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி கூறியிருந்தது.
எனினும், இத்திட்டம் உலு லங்காட், சிப்பாங் மற்றும் மேற்கு துறைமுகத்தை உள்ளடக்கிய தெற்கு வழித்தடத்தில் மேற்கொள்வதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என மாநில அரசு முன்னதாக கூறியிருந்தது.