ஷா ஆலம், அக் 19- கோவிட்-19 தடுப்பூசியைப் பெற விரும்பும் சிலாங்கூர்வாசிகள் மாநிலத்திலுள்ள 88 தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவ மையங்களில் அதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம்.
தடுப்பூசி பெற விரும்பும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கிளினிக்குகளில் முன்கூட்டியே வருகைக்கான முன்பதிவை செய்து கொள்வது அவசியமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தடுப்பூசி பெறுவதற்கு புதிதாக பதிந்து கொண்ட பெரியவர்கள், தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் தேதி கிடைக்காதவர்கள், முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசியைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட தேதியை தவறவிட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்ட விளக்கப்படத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் மாவட்டத்தில் தடுப்பூசி பெறுவதற்கான 22 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், உலு லங்காட் (18), கோல லங்காட் (9), கிள்ளான் மற்றும் சிப்பாங் (8), கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம்(3) ஆகியவை இந்த வசதியைக் கொண்டுள்ள இதர மாவட்டங்களாகும் என்றார்.
தடுப்பூசியை இன்னும் பெறாத அல்லது இரண்டாவது தடுப்பூசியைப் பெறத் தவறிய கிள்ளான் பள்ளத்தாக்குவாசிகளுக்கு 98 தனியார் மற்றும் அரசாங்க கிளினிக்குகளில் இலவசமாக தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தது.