ஷா ஆலம், அக் 20- எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூரிலுள்ள 5 பெங்குளுக்களுக்கு கையடக்க கணினிகளும் சிம் கார்டுகளும் வழங்கப்பட்டன.
மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த உபகரணங்களை பெங்குளுக்களிடம் ஒப்படைத்தார்.
கால மாற்றத்திற்கேற்ப பெங்குளுக்களின் பொறுப்புகள் முன்பைக் காட்டிலும் தற்போது நிறைய மாற்றம் கண்டு வருவதாக அவர் தமதுரையில் கூறினார்,
கிராமத்தில் அமைதியை உறுதி செய்வது, நல்லிணக்கத்தைப் பேணுவது, குறிப்பிட்ட அமலாக்கப் பணிகளுக்கு லைசென்ஸ், பெர்மிட் அனுமதியை வழங்குவது போன்ற பணிகளை பெங்குளுக்கள் முன்பு மேற்கொண்டனர். ஆனால் இப்போது அவர்களின் பணி நிர்வாகம் மற்றும் பேரிடரை கையாள்வதை மையமாக கொண்டுள்ளது என்றார் அவர்.
தற்போதுதுள்ள பெங்குளுக்கள் தரவுகள், தகவல்கள் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வதோடு அவர்களுக்கு இலக்கவியல் சம்பந்தப்பட்ட வசதிகள் தேவைப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
பெங்களுக்களைப் பொறுத்த வரை கையடக்க கணினி சார்ந்த தொழில்நுட்ப பயன்பாடு 25 விழுக்காடாக மட்டுமே இருந்த போதிலும் அவற்றை அவர்கள் எவ்வாறு மக்களின் நலனுக்காக பயன்படுத்துகின்றனர் என்பதுதான் முக்கியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.