ஷா ஆலம், அக் 21– வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் அம்சங்களில் புற நகர் சாலைகளின் மேம்பாடு மற்றும் சீரமைப்பும் அடங்கும் என்று புற நகர் மேம்பாடு மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.
கோல லங்காட் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களில் அதிகளவில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அச்சாலைகளை பழுதுபார்க்கும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கண்ட இடங்களில் வீசப்படும் குப்பைகளால் கிராமங்களின் தோற்றம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பகுதிகளில் குப்பை சேகரிப்பு மையங்களை அமைப்பதிலும் தாங்கள் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பெங்குளுக்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியார்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கிராம நிர்வாகம் மேலும் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கிராமத் தலைவர்களின் நிர்வாக ஆற்றலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் சொன்னார்.