ஷா ஆலம், அக் 21- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று பெய்த அடை மழைக்கு பல்வேறு திசைகளிலிருந்து வீசிய காற்று மேற்கு தீபகற்பத்தில் மையம் கொண்டதே காரணம் என்று வானிலை ஆய்வுத் துறை கூறியது.
நாடு எதிர்நோக்கும் பருவமழை மாற்றத்தினாலும் வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவதாக அதன் இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா கூறினார்.
இடியுடன் கூடிய அடைமழை பெய்வதற்குரிய சூழல் ஏற்படும் வகையில் பல்வேறு திசைகளிலிருந்து வீசும் பலவீனமான காற்று ஓரிடத்தில் மையம் கொள்ளும் சாத்தியத்தை மலேசியா கொண்டுள்ளது. இதன் கடும் மழை பெய்வதோடு பலத்த காற்றும் வீசும் என்று அவர் சொன்னார்.
இந்த வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு வானிலை ஆய்வுத் துறை அவ்வப்போது வெளியிடும் வானிலை குறித்த எச்சரிகைகையை ஏற்று செயல்படவும் வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
வானிலை தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அகப்பக்கம், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் 1 300 22 1638 என்ற எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம் என்றார் அவர்.
நேற்று பெய்த அடை மழையில் சிலாங்கூர், மலாக்கா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டதோடு திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியின் போது தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.