ஷா ஆலம், அக் 21– உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் இன்று தொடங்கி நகராண்மைக்கழகமாக பிரகடனப் படுத்தப்பட்டது.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுன் ஒப்புதலை ஏற்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த பிரகடனத்தை இன்று செய்தார்.
இந்த அந்தஸ்து உயர்வின் வழி உலு சிலாங்கூர் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சுற்றுலா மற்றும் தொழில்துறைகள் வளர்ச்சி காண்பதற்கும் வாய்ப்பினை பெறும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதன் மூலம் இவ்வட்டார மக்களுக்கு திறன் மற்றும் போட்டியிடும் ஆற்றல் ரீதியாக நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த அந்தஸ்து உயர்வு பல்வேறு தரப்பினர் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. நகராண்மைக்கழகத்தின் அனைத்து பணியாளர்களும் சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராகும் அதே வேளையில் மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்கான கடப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
இயங்கலை வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது பல்லாண்டுகால உழைப்பின் பயனாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறினார். மாநிலத்தின் மேம்பாட்டிற்கு இந்த அங்கீகாரம் அளவு கோளாக விளங்குவதால் இந்த வெற்றிக்காகாக அனைத்து மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று சொன்னார்,