ஷா ஆலம், அக் 23- சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை இலக்காக் கொண்டு நாளை தொடங்கி நடத்தப்படும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் பள்ளி செல்லாத இளையோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மந்திரி பசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்னும் தடுப்பூசி பெறாத உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்கும் இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் சொன்னார். தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் தேதி கிடைக்காதவர்கள் மற்றும் கிடைத்த தேதியை தவறவிட்டவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த தடுப்பூசி இயக்கத்தை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளிக்கும் விஷேச பற்றுச் சீட்டு குறியீடு வழங்கப்படும். மாணவர்கள் அந்த குறியீட்டைப் பயன்படுத்தி செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்யலாம் என்றார் அவர்.
விவேகக் கைப்பேசி வைத்திராதவர்களுக்கு செல்கேர் பணியாளர்கள் பதிவு செய்ய உதவுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். சிலாங்கூரில் 3,416 மாணவர்களை உள்ளடக்கிய செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் நாளை முதல் மேற்கொள்ளப்படுவதாக அமிருடின் முன்னதாக கூறியிருந்தார்.