ஷா ஆலம், அக் 23– வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மன நல சுகாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கான ஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் வலியுறுதியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்களின் மனநலம் தொடர்பான விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியுள்ளதாக மிஷல் இங் மேய் ஸீ கூறினார்.
மன நலத்திற்கான ஒதுக்கீடு வரும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர குறைக்கப்படக் கூடாது என்பது எனது கோரிக்கையாகும் என்றார் அவர்.
பொதுமக்களின் மனநல சுகாதாரத்திற்கு குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சுபாங் ஜெயா தொகுதியின் சிறு திட்டங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
செலங்கா செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் சேஹாட் எனப்படும் சிலாங்கூர் மனநல திட்டத்தின் அமலாக்கம் குறித்தும் அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்த திட்டம் எளிதானதாகவும் ஆலோசக சேவை தேவைப்படுவோருக்கு உதவக்கூடியதாகவும் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் மனநல பிரச்சனைகளைக் கையாளும் நோக்கில் 500,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த சேஹாட் திட்டத்தை மாநில அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி தொடக்கியது.