கோலாலம்பூர், அக் 28- இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 38 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 15,935 இணைய மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க ஸ்கேம், மக்காவ் ஸ்கேம் இல்லாத கடனுதவித் திட்டம், மின் வணிக முதலீடு ஆகிய மோசடி நடவடிக்கைகள் வாயிலாக அவர்கள் ஏமாற்றப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் (சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை/தடயவில் கணக்கியல் விசாரணை) இயக்குநர் டத்தோ முகமது ஹஸ்புல்லா அலி கூறினார்.
இத்தகைய மோசடிக் கும்பல்களின் தந்திர வலையில் பொதுமக்கள் இன்னும் சிக்கி பணத்தை இழப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த பத்தாண்டுகளில் இணைய மோசடி தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 60.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சனையின் தாக்கத்தை கருத்தில்கொண்டு வர்த்தக குற்றங்களுக்கு (இணையம் குற்றங்கள்) எதிரான விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை மாநில போலீஸ் தலைமையகம் மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையக நிலையில் வரும் நவம்பர் 8 ஆம் தேதி முதல் தாங்கள் நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது மக்களை ஏமாற்றுவதற்கு அந்த மோசடிக் கும்பல்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.