ஷா ஆலம், அக் 28- ஐ.பி.ஆர். எனப்படும் மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவதற்கு சிலாங்கூர் மக்கள் ssipr.selangor.gov.my எனும் அகப்பக்கத்தை சொடுக்கினால் போதுமானது.
இத்திட்டங்களில் பங்கேற்க விரும்புவோர் எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. உதவித் திட்டத்திற்கு இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்தால் போதுமானது. நீங்கள் இத்திட்டத்தின் வழி பயன்பெறுவதற்கு தகுதியானவரா என்பதை உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
இந்த ஐ.பி.ஆர். திட்டத்தில் வயது, பாலினம் மற்றும் இனத்தை காரணம் காட்டி யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் இத்திட்டங்கள் வாயிலாக உதவி பெற முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். பெடுலி ராக்யாட் விவேக திட்டத்தில் அல்லது ssipr வாயிலாக அல்லது மின்னஞ்சல் வழி பதிந்து கொண்டால் போதுமானது.
ஐ.பி.ஆர். பயனாளிகளின் தரவுகளை நிர்வகிக்கும் ஓரிட மையமாக ssipr உருவாக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவுவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பதிவு நடவடிக்கை மற்றும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறையை எளிதாக்கும் வகையிலான அகப்பக்கத்தை ssipr கொண்டுள்ளது.
அனைத்து ஐ.பி.ஆர், திட்டங்கள் தொடர்பான தகவல்களும் ஓரிட தரவு மையத்தில் சேகரித்து வைக்கப்படும். எந்த ஒரு தரவையும் உடனடியாக பரிசீலித்து உதவித் தேவைப்படுவோருக்கு உடனடி அங்கீகாரம் வழங்க இத்திட்டம் உதவுகிறது.