கிள்ளான், நவ 2- இம்மாதம் 4 முதல் 9 ஆம் தேதி வரை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கு காரணமாக கிள்ளான் மாவட்டத்தின் 11 பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்போங் தோக் மூடா, கம்போங் சுங்கை பினாங், புலாவ் இண்டா, பண்டமாரான், தாமான் செலாட் டாமாய், கம்போங் சுங்கை செர்டாங், கம்போங் பெரப்பாட், வட துறைமுகம், தெலுக்கோங் புலாவ் கித்தாம் மற்றும் கோலக் கிள்ளான் ஆகிய பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் இடைக்காலத் தலைவர் முகமது ஷரிசால் முகமது சாலே கூறினார்.
இப்பகுதிகளில் வசிப்பவர்கள் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பதோடு துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றலாவதற்கு தயாராகவும் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமையில் வெள்ள அபாயம் மிகுந்த பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு முடுக்கி விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் 4 ஆம் தேதி அதிகாலை 5.21 மணிக்கும் மறுநாள் அதிகாலை 6.02 மணிக்கும் 6ஆம் தேதி அதிகாலை 6.40 மணிக்கும் 7 ஆம் தேதி காலை 7.18 மணிக்கும் கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இக்காலக்கட்டத்தில் 5.6 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயரும் சாத்தியம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.