ஜாசின், நவ 13- மலாக்கா மாநில தேர்தலில் 30 வயதுக்கும் குறைவான வேட்பாளர்கள் சிலரை களமிறக்கும் கெஅடிலான் கட்சியின் முடிவு இளம் தலைமுறையினரின் குரலுக்கு அக்கட்சி செவிசாய்ப்பதை புலப்படுத்துதாக உள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 வயதான ஃபர்ஸானா ஹயானி முகமது நாசீர் மற்றும் 27 வயதான பிரசாந்த் குமார் பிரகாசம் ஆகியோரை ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் தாங்களும் சட்டமன்றத்திற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையை இளையோர் மனதில் ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கலாம். ஆனாலும், முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் அவர்களின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கோத்தா புடாயா சுங்கை ரம்பாய் உணவு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொகுதி வேட்பாளர் ஃபர்ஸானாவுடன் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதே சமயம், மற்றொரும் இளம் வேட்பாளரான பிரசாந்தையும் அவர் செம்பாங் கிராயோங்கில் சந்தித்து தனது ஆதரவை புலப்படுத்தினார்.
சுங்கை ரம்பாய் தொகுதியில் போட்டியிடும் ஃபர்ஸானா பெரிக்கத்தான் நேஷனல், புத்ரா, பாரிசான் நேஷனல் ஆகிய கட்சிகளிடமிருந்து போட்டியை எதிர் நோக்குகிறார்
பிரசாந்த் போட்டியிடும் ரிம் தொகுதியில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.