ஷா ஆலம், நவ 23- நேற்று பெய்த அடைமழை காரணமாக லெம்பா ஜெயா மற்றும் அம்பாங்கைச் சுற்றி உள்ள பகுதிகளில் 0.3 மீட்டர் முதல் 1.5 மீட்டர் அளவுக்கு உயர்ந்த வெள்ளம் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு குறைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இரவு 7 மணி முதல் நீர் மட்டம் திடீரென உயர்ந்ததாக அத்துறையின் இயக்குனர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார். இரவு 11 மணியளவில் நீர் வடியத் தொடங்கியது. துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார். நேற்று இரவு அந்த பகுதியில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. கனமழை தவிர, சீரற்ற வடிகால் முறையும் இந்த திடீர் வெள்ளத்திற்கு காரணம் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். இன்று காலை முதல் தமது தரப்பும் சிலாங்கூர் அரசு துறைகளும் பாதிக்கப்ட்டவர்களின் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நோரசம் கூறினார். நேற்று சுமார் மூன்று மணி நேரத்திற்கு நீடித்த அடைமழை காரணமாக அம்பாங், உலு லங்காட் மற்றும் கோம்பாக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.