ஷா ஆலம், நவ 24- பருவநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் தயார் நிலையில் உள்ளன.
தேவையான உபகரணங்களைத் தயார் படுத்தும் அதே வேளையில் துயர் துடைப்பு மையங்களாக செயல்படுவதற்கு ஏதுவாக அனைத்து சமூக மண்டபங்களும் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஆபத்து, அவசர சம்பவங்களைக் கையாள்வதில் ஊராட்சி மன்றங்களுக்கு துணையாக இருந்து வரும் அதிரடிப் பிரிவு பேரிடர் பகுதிகளுக்கு விரைந்து செல்வதற்கு ஏதுவாக முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பேரிடரில் சிக்கும் பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து தரப்பினரும் முழு ஆற்றலுடன் தயார் நிலையில் இருப்பர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
நேற்று முன்தினம் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு பெய்த அடை மழையினால் அம்பாங், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் 1.5 மீட்டர் வரை வெள்ளம் ஏற்பட்டது.