ஷா ஆலம், நவ 24- பத்தாங் காலியில் உள்ள கெடோண்டோங் ஆற்றைச் சுத்தப்படுத்துவதில் மிஸ்டர் டி.ஐ.ஒய். டிரேடிங் சென். பெர்ஹாட் நிறுவனத்துடன் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
அந்த ஆற்றுக்கு பழைய பொலிவை மீண்டும் ஏற்படுத்தும் அதே வேளையில் வருகையாளர்கள் வீசிய குப்பைகளை அகற்றுவதை நோக்கமாக கொண்ட இத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டதாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.
நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் இத்திட்டத்தில் எங்களுடன் இணைந்து செயல்பட முன்வந்த மிஸ்டர் டி.ஐ.ஒய். நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் வழி நீடித்த மேம்பாட்டைக் கொண்டு வரும் இலக்கை அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இப்பகுதிக்கு வருகை புரியும் போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும்படி பொது மக்களை அவர் அறிக்கை ஒன்றின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.
நேற்று நடைபெற்ற ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் உலு சிலாங்கூர் நகராண்மைக்கழகம், மிஸ்டர் டி.ஐ.ஒய். வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை, வன இலாகா, பூர்வக்குடியினர் நல இலாகா ஆகிய தரப்பினர் பங்கு கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது பிளாஸ்டிக், போத்தல், துணிகள் உள்ளிட்ட சுமார் 300 கிலோ எடையுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.