ஷா ஆலம், நவ 24– கெர்பாங் மெரிடிம் சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) திட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை கிள்ளான் ஆற்றிலிருந்து 75,402 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
அந்த குப்பைகளில் ஐம்பது விழுக்காடு சேமக்கிழங்கு செடிகள், புற்கள், மரக்கிளைகள் போன்ற தாவர வகை குப்பைகளாகும். எஞ்சியவை பிளாஸ்டிக், டின், துணை போன்ற பொருள்களாகும்..
அந்த ஆற்றில் குப்பைகளின எண்ணிக்கையை இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 33 விழுக்காடாக குறைக்கும் மாநில அரசின் இலக்கிற்கேற்ப இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக லண்டாசான் லுமாயான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷைபுல் அஸ்மின் நோர்டின் கூறினார்.
வரும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆற்றில் சேரும் வருடாந்திர குப்பையின் அளவை 40 விழுக்காடு குறைப்பதை இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
குப்பைத் தடுப்புகளை அமைப்பது மற்றும் தரம் உயர்த்துவது தவிர்த்து 38 இடங்களில் குப்பை சேகரிப்பு மையங்கள் உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குப்பைகளை மறுசுழற்சி செய்வது, அவற்றை முறையான இடங்களில் வீசுவது தொடர்பில ஆற்றோரங்களில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.