கோலாலம்பூர், நவ 27- இம்மாதம் 16 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 37 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள சாலை வரியை புதுப்பிக்கவிலை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சாலை வரியை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) திட்டமிடல் மற்றும் நடவடிக்கை பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் அய்டி ஃபாட்லி ரம்லி கூறினார்.
ஜே.பி.ஜே. முகப்பிங்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களிலும் திறந்திருக்கும் எனக் கூறிய அவர், கடைசி நேர நெரிசலைத் தவிர்ப்பதற்கு எதுவாக இப்போதே சாலை வரியை புதுப்பித்துக் கொள்ளும்படி வாகனமோட்டிகளை கேட்டுக் கொண்டார்.
வாகனமோட்டிகள் ஜே.பி.ஜே. அலுவலகங்களுக்கு நேரில் வரலாம். அலுவலகம் நேரம் குறித்த தகவல்களை ஜே.பி.ஜே. அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
நேற்றிரவு இங்குள்ள சுங்கை பீசி டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைக்கு வரும் டிசம்பர் மாதம் வரை மட்டுமே இந்த மோரோட்டோரியம் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு இந்த சலுகை நீட்டிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.
நேற்று இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் 3,210 வாகனங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டு 596 வாகனங்களுக்கு குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்,