ஷா ஆலம், டிச 1- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் மேன்மை தங்கிய தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தம்பதியர் நேற்று ஷா ஆலம் மருத்துவமனையில் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.
தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டப் பின்னர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் நினைவார்த்தமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாக அரச அலுவலகம் கூறியது.
கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்கள் மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்படக் கூடாது என்பதோடு நோய்த் தொற்று அணுகாத அளவுக்கு வல்லமை பெற்றவர்கள் என்று கருதிக் கொள்ளவும் கூடாது என்று சுல்தான் கடந்த ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி அறிவுறுத்தியிருந்தார்.
பொது மக்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் அதே வேளையில் புதிய இயல்பில் வாழ்வதற்கும் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் வரை தடுப்பூசி பெற்ற சிலாங்கூர் மக்களின் எண்ணிக்கை 85 விழுக்காட்டை எட்டியது குறித்தும் அவர் மனநிறைவு தெரிவித்திருந்தார்.