ஷா ஆலம், டிச 1– அடுத்தாண்டு தொடங்கி பயனீட்டாளர் உரிமை மற்றும் பொறுப்புகள் தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரமாக மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கால மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சிக்கேற்ப இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
தங்களின் உரிமை மற்றும் பொறுப்பு தொடர்பான பயனீட்டாளர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான பிரசார நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
இணையத்தில் உள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சௌகர்யமாக இருப்பதாக பொதுமக்கள் உணர்கின்றனர். எனினும் தங்களின் உரிமை மற்றும் பொறுப்புணர்வு குறித்து அவர்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்றார் அவர்.
இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில் தமது கீழுள்ள பயனீட்டாளர் விவாகரத் துறையின் 2022 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதோடு இதனால் பயனீட்டாளர்கள் லட்சக்கணக்கான வெள்ளியை இழந்துள்ளதாக சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
ஆகவே, இத்தகைய மோசடிகளில் பொதுமக்கள் சிக்கிவிடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு பயனீட்டாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.