ஷா ஆலம், ஜன 6- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளில் நேற்றிரவு 10.00 மணி வரை 47,006.95 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் மிக அதிகமாக அதாவது 20,264 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.
அதனைத் தொடர்ந்து சுபாங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் 8,407 டன் குப்பைகளும் கிள்ளான் நகராண்மை கழகப் பகுதியில் 7,245 டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி 95 விழுக்காடு முற்றுப் பெற்றுள்ள வேளையில் சுபாங் ஜெயா பகுதியில் 92 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா, சிப்பாங், காஜாங், கோல லங்காட், கோல சிலாங்கூர் ஊராட்சி மன்றப் பகுதிகளில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணி நேற்றுடன் முழுமை பெற்றது.