ECONOMYNATIONALPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையை நேற்று வரை 23,767 பேர் பெற்றனர்

ஷா ஆலம், டிச 10- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23,767 குடும்பங்கள் சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றன. 

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் நிதித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

 நேற்று காலை வரை பதிவான எண்ணிக்கை இதுவாகும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட விளக்கப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்து அந்தப் பேரிடரில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேரின் வாரிசுகள் தலா 10,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 2,326 பேர் உதவித் தொகையைப் பெற்ற வேளையில் சிப்பாங் மற்றும் கோல லங்காட்டில் 1,890 பேரும் கோல சிலாங்கூரில் 1,548 பேரும் உலு சிலாங்கூரில் 51 பேரும் சபாக் பெர்ணமில் 35 பேரும் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை தொடர்ந்து அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுவி வழங்குவதற்கும் பாதிப்புக்குள்ளான அடிப்படை வசதிகளை செய்வதற்கும் 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை மாநில அரசு தொடக்கியது.


Pengarang :