ஷா ஆலம், ஜன 10- பெர்மாத்தாங் தொகுதியிலுள்ள 346 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு பிறந்து இவ்வாண்டில் முதலாம் வகுப்பில் நுழையும் இம்மாணவர்களுக்கு புத்தகப் பை, உணவுக் கலம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார். இப்பொருள்களை இன்று தொடங்கி அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார். மாநில அரசின் இந்த உதவித் திட்டம் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். ஒரு புத்தகப் பையின் விலை 50 வெள்ளியை எட்டும் என்பது நாம் அறிந்ததே. இச்சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் சுமையைக் குறைப்பதில் இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என்றார் அவர். இந்த உதவித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களை தாவாஸ் உறுப்பினர்கள் https://tawas.yawas.my/admin/semakan_pbms.php என்ற அகப்பக்கம் வாயிலாகவும் ஹபிஷ் (03-32812069) அல்லது ஃபாத்தின் (010-5573736) ஆகியோருடனும் தொடர்பு கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள 44,484 தாவாஸ் உறுப்பினர்கள் இவ்வாண்டிற்கான பள்ளி உபகரணங்களைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 4 ஆம் தேதி கூறியிருந்தார்.