ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூரின் முதலீடு இவ்வாண்டில் சிறப்பானதாக இருக்கும்- டத்தோ தெங் கணிப்பு

ஷா ஆலம், ஜன 10- சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரம் கடந்த 2021 ஆம் ஆண்டைவிட இவ்வாண்டு சிறப்பானதாக இருக்கும் என முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறுகிறார்.

வெள்ளம் நிலை சீரடைந்தது மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது ஆகியவை பொருளாதாரம் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

புதிதாக உருவெடுத்துள்ள ஒமிக்ரோன் நோய்த் தொற்று குறித்து கணிக்க முடியாத சூழல் நிலவுவதால் எல்லா சூழ்நிலைகளிலும் குறிப்பாக விழாக் காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எல்லைகளைக் கடப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எந்தவொரு பயணக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் உள்நாட்டு பொருளதார நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி முதலீடுகளும் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு உண்டாகும் என்றார் அவர்.

மாநிலத்தின் முதலீடுகள் பெருந்தொற்றின் விளைவுகளைப் பொறுத்தே அமையும். அடுத்து வரும் சில மாதங்களுக்கு எந்தவொரு இயற்கை பேரிடரும் ஏற்படாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

2022 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூ மாநில நிலையிலான சீனப் புத்தாண்டு தொடர்பில் இயங்கலை வாயிலாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டிற்கான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை இயங்கலை வாயிலாக நடத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.

 


Pengarang :