கோலாலம்பூர், ஜன 14- தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான செயலாக்க நடைமுறைகள் யாவும் ஆலய நிர்வாகம் மற்றும் சுகாதார இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் வரையப்பட்டவையாகும்.
உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் உள்பட கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சிடேக் கூறினார்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆலய நிர்வாகத்தினருடன் நடத்தப்பட்ட சந்திப்பின் வாயிலாக இந்த பரிந்துரைகளும் கோரிக்கைகளும் அமைச்சிடம் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த பரிந்துரைகள் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு உரிய பரிசீலனைக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் கருதி அங்கீகரிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், அந்த சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத சிலர், எஸ்.ஒ.பி. விதிகள் குறித்து நான் வாக்குறுதி வழங்கியது போலவும் அந்த வாக்குறுதிகளை நானே மீறி விட்டது போலவும் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று பத்து மலைத் திருத்தலத்தில் தைப்பூச ஏற்பாடுகளை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
நேற்று முன்தினம் தைப்பூசத்திற்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அறிவித்த ஹலிமா, இரத ஊர்லவம் மற்றும் பால் குட ஊர்வலத்திற்கு இவ்வாண்டு தைப்பூச விழாவில் அனுமதி வழங்கப்படுவதாக கூறியிருந்தார்.
இம்மாதம் 14 முதல 19 ஆம் தேதி வரை பால் குட ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப் படுவதாக கூறிய அவர், எனினும் ஆலயங்களின் பரப்பளவுக்கேற்ப உடன் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் காவடி எடுப்பதற்கும் கடைகளை அமைப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.