ஷா ஆலம், ஜன 16- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஸ்ரீ மூடா வட்டாரத்தைச் சேர்ந்த 3,000 பேருக்கு மலேசியா ட்ஸூ ஸீ சங்க அறவாரியம் தலா 1,000 ஆயிரம் வெள்ளியை வழங்கியது.
கடந்த மாதம் 24 முதல் 26 ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாங்கள் மேற்கொண்டு துப்பரவுப் பணியின் போது கண்டறியப்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிதியுதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அந்த அறவாரியத்தின் துணை தலைமை செயல்முறை அதிகாரி சியோ கீ ஹோங் கூறினார்.
அந்த துப்புரவுப் பணியின் போது கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் உள்பட வீட்டிலுள்ள அனைத்து பொருள்களும் முற்றாகச் சேதமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் பெரும் துயரில் இருந்ததைக் கண்டோம்.
ஆகவே, அவர்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக இந்த ரொக்கத் தொகையை வழங்க முடிவு செய்தோம். மக்களின் சுமையைக் குறைக்கும் அதேவேளையில் நாட்டு மக்கள் நலன் மீது எங்களின் பரிவைக் காட்டும் விதமாகவும் இந்த உதவியை வழங்குகிறோம்.
தொடக்கக் கட்டமாக ஸ்ரீ மூடாவில் இந்த நிதியுதவித் திட்டத்தை ஆரம்பிக்கிறோம். பின்னர் உலு லங்காட் மற்றும் பகாங்கில் இத்திட்டம் தொடரப்படும் என்றார் அவர்
இந்த உதவியைப் பெற்ற அனைவரும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது அடையாளம் காணப்பட்டவர்களாவர். இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் இந்த உதவியை வழங்குகிறோம் என்று அவர் சொன்னார்.