கோலாலம்பூர், ஜன 17- நாட்டில் நேற்றைய நிலவரப்படி 40 விழுக்காட்டினர் அல்லது 93 லட்சத்து 64 ஆயிரத்து 326 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று 145,922 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. இதனிடையே, பெரியவர்களில்2 கோடியே 29 லட்சத்து 3 ஆயிரத்து 466 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 31 லட்சத்து 83 ஆயிரத்து 820 பேர் அல்லது 99 சதவீதம் பேருக்கு குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 73 ஆயிரத்து 734 பேர் அல்லது 88.1 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். மேலும், 28 லட்சத்து 61 ஆயிரத்து 589 பேர் அல்லது 90.9 சதவீதம் பேர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.