ஷா ஆலம், ஜன 18- தைப்பூச விழாவை முன்னிட்டு அமல்செய்யப்பட்ட சீரான செயலாக்க நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள சிறு வியாபாரிகளுக்கு சிறப்பு திட்டம் உருவாக்கப்படுகிறது.
இந்த வியாபாரிகளுக்கு தற்காலிக வியாபார இடங்களை பெற்றுத் தருவதற்காக மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்களுடன் விவாதிக்கப்படுவதாக மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
தைப்பூசத்தின் போது வியாபாரம் செய்வதற்காக பல சிறு வியாபாரிகள் பெரும் செலவில் பொருள்களை வாங்கி விட்டதாக அவர் சொன்னார்.
ஆகவே, எஸ்.ஒ.பி. விதிகளின் அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் மந்திரி புசாருக்கான சமூக சிறப்பு விவகார அலுவலகத்தின் வாயிலாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.
அந்த வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் வியாபாரம் செய்வதற்கான இடத்தை அடையாளம் காண்பதில் ஊராட்சி மன்றங்களுடன் தாங்கள் ஒத்துழைப்பை நல்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் குறிப்பாக செலாயாங் நகராண்மைக் கழகம் மற்றும் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக நிலையில் இத்திட்டத்தை அமல் படுத்தும் முயற்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்திய சமூகத் தலைவர்களும் ஈடுபட்டுவாக அவர் மேலும் குறிப்பிட்டார்.