ஷா ஆலம், ஜன 19- சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பிகே 8 பண்டார் கின்ராரா பகுதியில் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டு வழித்தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கை தொடர்பில் கடந்த வாரம் முதல் தாம் பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்களைப் பெற்றதைத் தொடந்து சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மூலம் அந்த வழித்தடத்தை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்த இடத்தை காலி செய்யக் கோரும் நோட்டீசை நில மற்றும் கனிமவளத்துறை இயக்குநர் வெளியிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருந்த போதிலும், கட்டுமானப் கழிவுகளை இவ்விடத்தில் கொட்டும் நடவடிக்கை அண்மைய சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதோடு மட்டுமின்றி அருகிலுள்ள கட்டுமானப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடியிருப்புகளும் அங்கு தோன்றின என்றார் அவர்.
ஏற்கனவே மூடப்பட்ட கால்வாயை சுபாங் ஜெயா மாநகர் மன்ற அதிகாரிகள் இயந்திரங்களைக் கொண்டு மீண்டும் தோண்டியதோடு லோரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லாவண்ணம் தடையையும் ஏற்படுத்தினர் என்று அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்த நிலம் கல்வியமைச்சுக்கு சொந்தமானது எனக் கூறிய அவர், இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கல்வியமைச்சுடன் இது குறித்து விவாதிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.