ஷா ஆலம், ஜன 20- கடந்த மாதம் சிலாங்கூரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீட்பு பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்திற்கான காரணங்களை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பட்டியலிட்டார்.
வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கிய கார்களில் மீட்பு படகுகள் சிக்கிக் கொண்டது, வெள்ள நிவாரண மையங்களாக அறிவிக்கப்பட்ட பள்ளிகள் உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது ஆகியவையும் அக்காரணங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். வெள்ள நிவாரண மையங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களையும் வெள்ளம் சூழந்துவிட்டது. மேலும் வீடமைப்பு பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலைகளில் மூழ்கிய கார்களில் படகுகள் சிக்கிக் கொண்டு பயணிக்க முடியாத சூழல் உண்டானது.
இதனால், மீட்புப் பணியாளர்கள் உபகரணங்களை சொந்தமாக சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர். அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த முகவரிகளை அடையாளம காண முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
வெள்ள அகதிகளுக்காக அடையாளம் காணப்பட்ட துயர் துடைப்பு மையங்களும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் தற்காலிக அடிப்படையில் சூராவ், பள்ளிவாசல் மற்றும் தற்காலிக கூடாரங்களில் பாதிக்கப் பட்டடவரகளை தங்க வைக்க நேர்ந்தது என அவர் மேலும் சொன்னார்.