ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

மார்ச் 14 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டம்- சுல்தான் தொடக்கி வைப்பார்

ஷா ஆலம், ஜன 21– சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 14 வது தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைக்க மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்தார்.

இந்த கூட்டத் தொடர் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு நடைபெறவுள்ளதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் மரியாதை அணிவகுப்பு, விருந்து நிகழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய முழு பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடத்தப்படும் என்பதோடு இந்நிகழ்வுகளில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடரை தொடக்கி வைக்க மேன்மை தங்கிய சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இதர விவகாரங்களை மையமாகக் கொண்ட மேன்மை தங்கிய சுல்தானின் உரை மீதான விவாதங்களில் உறுப்பினர் பங்கேற்பர் என்றார் அவர்.

அதிகமான எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி கேள்விகள் வெள்ளம் தொடர்பானவையாக இருக்கும். இதுவே உறுப்பினர்களின் விவாதத்தில் இடம் பெறும் முதன்மை அம்சமாகவும் விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் தொடர்பில் விவாதிப்பதற்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு, அத்தகைய பிரேரணை எதுவும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து தாம் இன்னும் பெறவில்லை என்று அவர் பதிலளித்தார்.


Pengarang :