ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

230,020 பெரியவர்கள் நேற்று ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 21- நாட்டில் நேற்று 230,020 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். இதனுடன் சேர்த்து அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்து 759 ஆக அல்லது 43.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டிலுள்ள பெரியவர்களில் 97.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 13 ஆயிரத்து 483 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 2 கோடியே 31 லட்சத்து 91 ஆயிரத்து 008 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினருக்கு குறைந்தது  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.

இது தவிர 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 88.3 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 78 ஆயிரத்து 389 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்ற வேளையில் மேலும் 91 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 63 ஆயிரத்து 086 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் வழி பிக்  எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 17 லட்சத்து 78 ஆயிரத்து 396 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 22 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் குறிப்பிட்டது.


Pengarang :