ஷா ஆலம், ஜன 24- எந்நேரத்திலும் வெள்ளம் உள்ளிட்ட் பேரிடர்கள் ஏற்படலாம் என்கிற சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள அரசாங்க ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தயாராக இருக்கும் அதேவேளையில் கடுமையாக உழைக்கவும் வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் விரைந்து செயல்படுவதற்கும் அவசியமான சூழலை கடந்த மாதம் ஏற்பட்டதைப் போன்ற பேரிடர் மறுபடியும் ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்று அவர் சொன்னார்.
எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் உறங்காமல் மாற்றதை ஏற்படுத்துவதற்கு கடுமையாகப் பாடுபட்டு வரும் மாவட்ட அதிகாரிகளைத் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பட்டார்.
எதிர்பாராத சூழல் இனி அடிக்கடி நிகழ்வதற்குரிய வாய்ப்பு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய பேரிடர்கள் மறுபடியும் ஏற்படலாம். இதுவே தற்போது நாம் எதிர்நோக்கும் நிலையாகும் என்றார் அவர்.
இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் புத்தாண்டு செய்தியை வழங்கிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
மாநில அரசு, கோவிட்-19 பரிசோதனை, கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வருவதாகவும் அமிருடின் தமது உரையில் குறிப்பிட்டார்.