ஷா ஆலம், மார்ச் 23– வரும் 2025 ஆம் ஆண்டில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடாக நிலத்தடி, ஏரி மற்றும் ஈயச்சுரங்களில் உள்ள நீர் வளங்கள் மீதான ஆய்வுகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் மாற்று வழியாக தனியார் நிலங்களிலிருந்து நீரை எடுப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.
மலேசிய கனிம வள மற்றும் புவிஅறிவியல் துறையிடம் கிணறு வெட்டுவதை தவிர வேறு திறன் இல்லாததால் நிலத்தடி நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
நிலத்தடி நீர் ஆதாரம் குறைவாக உள்ள காரணத்தால் அந்த நீர் வளம் முழுவதையும் நீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு விநியோகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த நீரை பொதுமக்கள், தனியார் துறை மற்றும் தொழில் துறையின் பயனீட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பில் தொடர் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது எங்களின் கருத்தாகும் என்றார் அவர்.
பேரிடர்களைச் சமாளிப்பதற்கான கூடுதல் உள்கட்டமைப்புகளும் மாற்று ஏற்பாடுகளும் செய்யப்ப வேண்டும் என்பதோடு பேரிடரை எதிர்கொள்ள சமூகத்திற்கு பயன் தரக்கூடிய ஆக்ககரமான தொடர்பு முறைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.