கிள்ளான், மார்ச் 4- கிள்ளான் ஆற்றில் குப்பைகளின் அளவைக் குறைப்பதற்காக நான்கு ஊராட்சி மன்றங்கள் அந்த ஆற்றின் நெடுகிலும் குப்பைத் தடுப்பு பொறிகளை அமைக்கவுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மாதந்தோறும் 850 மெட்ரிக் டன்னாக இருந்த அந்த ஆற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளின் அளவை இவ்வாண்டில் 500 டன்னாக குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஆகிய பகுதிகளில் இந்த பொறிகளை அமைக்கும் பணி இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரம் எஸ்.எம்.ஜி. எனப்படும் சிலாங்கூர் கடல் நுழைவாயில் ஆலோசக மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்ட்டு விட்டதாக கூறிய அவர், எனினும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் குப்பைகள் கிள்ளான் ஆற்றில் நுழைவதற்கு முன்பாகவே தடுத்து விட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குள்ள பெங்காலான் பத்து பொது பூங்கா பகுதியில் இண்டெர்செப்டர் 005 இயந்திரத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.
கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தும் பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் எனக் கூறிய அவர், இத்திட்டத்திற்கு தேவைப்படும் 50 கோடி முதல் 70 கோடி வெள்ளி வரையிலான தொகையை அரசு சார்பு அமைப்பு ஏற்றுக் கொள்ளும் என்றார்.