ECONOMYSELANGOR

ஐ-பிஸ்னஸ் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி கடனுதவி- ஹிஜ்ரா அறவாரியம் வழங்கியது

ஷா ஆலம், மே 18– இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஐ-பிஸ்னஸ் திட்ட பங்கேற்பாளர்களுக்கு 965,000 வெள்ளி வர்த்தகக் கடனுதவியை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள 2,229 தொழில் முனைவோர் பலனடைந்துள்ளதாக ஹிஜ்ரா அறவாரியத்தின் வர்த்தக ஊக்குவிப்பு பிரிவு அதிகாரி முகமது ரிட்வான் அஸ்மாரா கூறினார்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு வெ. 1,000 முதல் வெ. 50,000 வரை கடனுதவி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஐ-பிஸ்னஸ் திட்டத்தில் 30,000 வெள்ளிக்கும் கீழ் கடன் பெறுவோருக்கு 4 விழுக்காடும் 31,000 வெள்ளிக்கும் மேல் கடன்  பெறுவோருக்கு 8 விழுக்காடும் லாபத் தொகை அறிவிக்கப்படுவதால் இத்திட்டத்திற்கு வணிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.

இது தவிர, சில்லறை வியாபாரம், உணவு, சேவை, போக்குவரத்து, இணைய வாணிகம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழில், விவசாயம் உள்பட அனைத்து மாதிரியான வணிக நடவடிக்கைகளுக்கும் இத்திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தில் கடன் பெறுவோர் அந்த அறவாரியம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த கடனுதவித் திட்டம் எளிதானதாகவும், விரைவானதாகவும் சுமையில்லாத தாகவும் இருப்பதால் மலேசிய நிறுவன ஆணையம் அல்லது ஊராட்சி மன்ற லைசென்ஸ் கொண்டிருப்பவர்கள் கடனுதவிக்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :