ECONOMYMEDIA STATEMENT

டோல் சாவடி அருகே பட்டாசு வெடித்து பிறந்த நாள் கொண்டாட்டம்- ஐவர் கைது

ஷா ஆலம், மே 18- இங்குள்ள செத்தியா ஆலம் டோல் சாவடி அருகே கடந்த வாரம் பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படும் ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பான காணொளி டிக்டாக் வழி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து 30 முதல் 42 வயது வரையிலான அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

இச்சம்பவம் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் நிகழ்ந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

“பெரிய அண்ணனின் பிறந்தாள் கொண்டாட்டம்“ எனும் தலைப்பில் காணொளி ஒன்றை யோகன்212 என்ற டிக்டாக் கணக்கின் உரிமையாளர் பதிவேற்றம் செய்துள்ளதை புகார்தாரரான செத்தியா ஆலம் போலீஸ் நிலையத் தலைவர் கடந்த மே 16 ஆம் தேதி பிற்பகல் 12.00 மணியளவில் கண்டதாக ஏசிபி இக்பால் சொன்னார்.

தன் நண்பர்களைச் சந்திப்பதற்காக செத்தியா ஆலம் டோல் சாவடி அருகே காரை நிறுத்திய முஸ்தாபா என அழைக்கப்படும் நபருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக அந்த ஆடவரின் நண்பர்கள் டோல் சாவடி அருகே சாலையோரம் பட்டாசுகளை வெடித்துள்ளது அந்த காணொளியில் வெளியான காட்சிகள் வழி தெரியவந்துள்ளது என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் 1957 ஆம் ஆண்டு வெடிமருந்துச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.


Pengarang :