ஷா ஆலம், ஜூன் 29– பெட்டாலிங் ஜெயா பகுதியில் கடந்த ஒரு வார காலத்தில் 100 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முந்தைய வாரத்தில் 85 ஆக இருந்த டிங்கி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 18 விழுக்காடு அதிகமாகும் என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர் கூறினார்.
இருபத்தோறு நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 14 கட்டுப்படுத்தப்படாத பகுதிகள் மற்றும் ஐந்து நோய்ப் பரவலுக்கான சாத்தியம் உள்ள பகுதிகளில் மொத்தம் 1,874 சம்பவங்கள் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
டிங்கி சம்பவங்களின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மாநகர் மன்றம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் 12,391 இடங்களை அடையாளம் கண்டு அழித்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அமலாக்க நடவடிக்கைகளைப் பொறுத்த வரை ஏடிஸ் கொசுக்கள் வளரும் இடங்களை அழிக்கத் தவறியது தொடர்பில் 133 குற்றப்பதிவுகளும் 16 குற்ற அறிக்கைகளும் வழங்கப்பட்டதோடு இரு கட்டுமானப் பகுதிகளிலும் பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார் அவர்.