ECONOMYNATIONAL

உணவுப் பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்தவே கோழி, முட்டைக்கு புதிய உச்சவரம்பு விலை 

கோலாலம்பூர், ஜூன் 30– ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் பெரிய மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே கோழி மற்றும் முட்டைக்கு புதிய உச்சவரம்பு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என எம்.ஐ.டி.எஃப். ஆய்வு நிறுவனம் கூறியது.

உதாரணத்திற்கு தீபகற்ப மலேசியாவில் வெ.9.40 ஆக நிர்ணயிக்கப்பட்ட ஒரு கிலோ கோழியின் புதிய உச்சவரம்பு விலை, முந்தைய விலையான வெ.8.90ஐ காட்டிலும் 5.6 விழுக்காடு மட்டுமே அதிகமாகும்.

கோழியின் விலை சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் அது கிலோ 10.00 வெள்ளி முதல் 12.00 வெள்ளி வரை உயர்வு காண்பதைக் காட்டிலும் இந்த விலை உயர்வு மிகவும் குறைவானதே என அது தெரிவித்தது.

தாய்லாந்திலிருந்து 4,500 டன் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி உள்நாட்டுச் சந்தையில் அந்த உணவு மூலப் பொருளின் விலை நிலைத்தன்மை பெறுவதற்கு உதவி புரியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

பொருள் விலையேற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் அறிவித்து வரும் பல்வேறு திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில்  துணை புரியும்.

கோழியின் விலையை சந்தையின் தேவைகேற்ப நிர்ணயிக்கும் முடிவை நேற்று கூடிய அமைச்சரவை மாற்றிக் கொண்டதோடு கோழிக்கான உதவித் தொகையை தொடர்ந்து வழங்கவும் முடிவெடுத்துள்ளது. இதன் வழி நாளை தொடங்கி  நடுத்தர கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு வெ. 9.40 ஆக நிர்ணயிக்கப்படும்.


Pengarang :