கோலாலம்பூர், ஜூலை 1- மலேசிய நிறுவன ஆணையம் (எஸ்.எஸ்.எம்.) 1965 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அபராதத்திற்கான கழிவுச் சலுகை காலத்தை இவ்வாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அபராதக் கழிவுச் சலுகை இவ்வாண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சலுகையின் கீழ் நிறுவனங்களும் நிறுவன இயக்குநர்களும் அசல் அபராதத் தொகையிலிருந்து 90 விழுக்காடு வரை கழிவினைப் பெற முடியும். 1965 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் புரியப்பட்ட குற்றங்களுக்காக வழங்கப்பட்ட குற்றப்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என அந்த ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியது.