ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

டிரோன் மையத்தை உருவாக்கும் முயற்சியில் செலாத்தி நிறுவனம் மும்முரம்

ஷா ஆலம், செப் 10- டிரோன் எனப்படும் தானியங்கி வானுர்தியை மேம்படுத்தும் முயற்சியில் சிலாங்கூர் எவியேஷன் அண்ட் டெக்னோலோஜி சென். பெர்ஹாட் (செலாத்தி) நிறுவனம் பல்வேறு தரப்பினருடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது.

இதன் தொடர்பான சோதனைகள் பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் பல்கலைக்கழக வளாகத்தில் அரசு சார்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று செலாத்தி நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டாக்டர் முகமது ஜூல்கிப்ளி ஜக்காரியா கூறினார்.

இந்த ஆய்வுக்குப் பின்னர் மாதிரி டிரோன் சாதனத்தை உள்நாட்டு பெட்ரோலிய நிறுவனத்திற்காக உருவாக்கவிருக்கிறோம். அந்நிறுவனம் எங்களிடம் டிரோன் சாதனத்தை வாங்கிக் கொள்ளும் அதே வேளையில் பயிற்சிக்கான வாய்பினையும் வழங்கும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எனினும், நம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு அந்த மாதிரி டிரோன் சாதனங்களை சம்பந்தப்பட்ட தொழில்துறையினர் சோதனையிடவும் பறப்பதற்கான அங்கீகாரத்தைப் பெறவும் நாங்கள் உதவி புரிவோம் என்றார் அவர்.

தொழில்துறையினரின் நடப்புத் தேவைக்கேற்ப வசதிகளை ஏற்படுத்தி தருவதை தாங்கள் உறுதி செய்யவுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :