சிப்பாங், செப் 28- வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வரும் புதிய தொழிலாளர்களை பெறுவதற்காக முதலாளிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அவசியம் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான முதலாளிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஷைமி டாவுட் கூறினார்.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை அவர்களின் முதலாளிகளே கவனிக்க வேண்டும் என்பதோடு தாங்கள்தான் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் உண்மையான முதலாளி என்பதையும் நிரூபிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பெறுவதற்கு முதலாளிகளுக்கு ஆறு மணி நேர அவகாசம் மட்டுமே வழங்கப்படும். எனினும், சூழ்நிலையைப் பொறுத்து கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
முதலாளிகள் நேரில் வரும் வரை சம்பந்தப்பட்டத் தொழிலாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து தொழிலாளர்களும் சட்டப்பூர்வமான தொழிலாளர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இந்த விதிமுறையை முதலாளிகள் பின்பற்றத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கு நுழைவு அனுமதி மறுப்பு நோட்டீஸ் (என்.டி.எல்.) வழங்கப்பட்டு அடுத்த விமானத்தில் அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்டுவர் என்று அவர் எச்சரித்தார்.