சோங்க்லா, டிச 4- இங்குள்ள சாடோ எனும் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் தாய்லாந்திலிருந்து மலேசியா நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் தடத்தை விட்டு நழுவியது.
ஹாட்யாயிலிருந்து ரப்பரை ஏற்றிக் கொண்டு பாடாங் பெசார் நோக்கி வந்து கொண்டிருந்த அந்த இரயில் உள்ளுர் நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் தடத்தை விட்டு விலகியதாக தாய்லாந்து இரயில்வே நிர்வாகம் கூறியது.
இச்சம்பவத்தில் அந்த இரயிலின் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் காயமின்றி தப்பியதாக அந்த இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக அந்த இரயிலில் இணைக்கப்பட்டிருந்த 15 பெட்டிகளில் 11 தண்டவாளத்தை விட்டு நழுவியது எனவும் அது தெரிவித்தது.
இதனிடையே, இரயில் தண்டவாளத்தை விட்டு விலகி அதிலிருந்து கொள்கலன்கள் கீழே விழுந்ததற்கு வெடிப்புச் சம்பவமே காரணம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தாய்லாந்து போலீசார் கூறினர்.
சுமார் 26 கிலோ நாட்டு வெடி மருந்து அந்த தண்டவாளத்தில் பதித்து வைக்கப் பட்டிருந்ததை தொடக்க கட்ட விசாரணைகள் காட்டுகின்றன. இச்சம்பவத்தில் தண்டவாளம் கடுமையாக சேதமடைந்தது.