கோலாலம்பூர், ஜன 29- இணையம் வாயிலாக தங்க நகைகளை வாங்கி
விற்கும் மோசடிக் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை அரச மலேசிய
போலீஸ் படையினர் ((பி.டி.ஆர்.எம்.) முறியடித்துள்ளனர்.
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் கடந்த வாரம் வியாழக்கிழமை
மேற்கொண்ட இரு அதிரடிச் சோதனை நடவடிக்கைளில் நால்வரைக்
கைது செய்த தன் மூலம் இந்த கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு
வந்ததாக பி.டி.ஆர்.எம். செயலாளர் டத்தோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.
இந்த நடவடிக்கைகளில் 26 முதல் 45 வயது வரையிலான ஒரு ஆடவர்
மற்றும் மூன்று பெண்களைக் கைது செய்தோம். அவர்களில் நாட்டில்
நிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்ட ஒரு பெண் இத்திட்டத்திற்கு
மூளையாகச் செயல்பட்டு கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த கும்பல் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தீவிரமாகச் செயல்பட்டு
வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், டெலிகிராம்
மற்றும் இண்ட்ஸ்டாகிராம் செயலிகள் மூலம் நகைகளை விளம்பரப்படுத்தி
வாடிக்கையாளர்கள கவர்ந்திழுக்கும் நடவடிக்கையில் இக்கும்பல் ஈடுபட்டு
வந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள நகைகளை வாங்க விரும்பி அந்த
கும்பலைத் தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களிடம் தாங்கள்
குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தும்படி அக்கும்பல்
கேட்டுக் கொள்ளும்.எனினும், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியப்
பின்னரும் நகைகள் கிடைக்காமல் போகவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் உணர்ந்து போலீசில் புகார்
செய்துள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இணையம் வாயிலாக மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அக்கும்பல்
பயன்படுத்திய ஆறு கைப்பேசிகள், இரு வங்கி அட்டைகள், ஏழு வாட்ஸ்ஆப் உரையாடல் நகல்கள் ஆகியவற்றை இச்சோதனையின் போது தாங்கள் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.