ஷா ஆலம், பிப் 1- பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை உள்ளடக்கிய ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் (ஜே.எஸ்.பி.) முன்னெடுப்பு புதிய திட்டங்களுடன் மெருகேற்றப்பட்டு வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறவுள்ளது.
இந்த புதிய பயணத் தொடர் அதிக ஜனரஞ்சக நிகழ்வுகளுடன் ஒரு நாள் நிகழ்வுக நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த காலங்களைப் போல் இரண்டு தினங்களில் அல்லாமல் ஒரே தினத்தில் மட்டும் இந்நிகழ்வை நடத்தவுள்ளோம். ஆனால், அதன் உள்ளடக்கம் கடந்த முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த ஜே.எஸ்.பி. திட்டத்தை மாநிலத்திலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.
இந்த ஜே.எஸ்.பி. திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம், அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை, கண்காட்சி, விளையாட்டு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.