ஷா ஆலம், பிப் 4- சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய பகுதிகளுக்கு குளத்து நீரை முறையாக கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக நீர் மூல ஆதார உத்தரவாதத் திட்டத்தின் கீழ் சிறப்பு அடிப்படை வசதிகளை சிலாங்கூர் அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த முன்னெடுப்பின் வாயிலாக நீரின் தரப் பிரச்னைக்குத் தீர்வு காணவும் நீரின் அளவை அதிகரிக்கவும் இயலும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த நோக்கத்திற்காக சுங்கை சிலாங்கூரில் மணிக்கு 3,000 லிட்டர் நீரை வெளியேற்றும் சக்தி கொண்ட பம்ப் சாதனங்கள், கச்சா நீர் குழாய், நீர் இறைப்பு பம்ப் நிலையம் மற்றும் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய மதகு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
மூன்று மாநிலங்களுக்கும் நீண்டகால அடிப்படையில் நீர் உத்தரவாதத்தை வழங்கக்கூடிய அத்திட்டம் இவ்வாண்டு இறுதியில் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவது மூலம் நீர் மாசுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணவும் ஆற்றின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பகுதிகளில் காணப்படும் நீர் பற்றாக்குறை பிரச்னையைக் களையவும் முடியும் என்று அவர் சொன்னார்